குழித்துறை அருகே இளைஞர் ஒருவர் இளம்பெண்ணிடமிருந்து 2 பவுன் நகையை பறித்துச் சென்றதாக போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.
குழித்துறை அருகேயுள்ள பழவார் பகுதியைச் சேர்ந்தவர் அகஸ்டின் மகள் அனிஷா (20). இவர் வியாழக்கிழமை மாலையில் தனது இருசக்கர வாகனத்தில் குழித்துறையிலிருந்து பாகோடு நோக்கி சென்றாராம். அப்போது அந்த வழியாக வந்த இளைஞர் ஒருவரையும் பைக்கில் ஏற்றிச் சென்றாராம். இருவரும் பாகோடு அருகே சாலையோரம் ஆள் நடமாட்டமில்லாத பகுதியில் நின்று நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தனராம். இதனால் சந்தேகமடைந்த அப்பகுதியினர் அங்கு வர, இளைஞர் அங்கிருந்து தப்பியோடினாராம். இதையடுத்து அப் பெண், தப்பியோடிய இளைஞர் தன்னிடமிருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றதாக கூறி அழுதாராம். இது குறித்து களியக்காவிளை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.