திருவட்டாறு அருகே மதபோதகரை கத்தியால் குத்தியவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
சுவாமியார்மடம் கவியலூர் பகுதியைச் சேர்ந்தவர் ஞானதாஸ். இவரது மகன் ஜெபசிங் (35) . இவர்கள் இருவரும் தங்களது வீட்டில் ஜெபக்கூட்டம் நடத்தி வருகின்றனர். இவர்கள் நடத்தும் கூட்டத்திற்கு அப்பகுதியிலுள்ளவர்கள் சென்று வருவது வழக்கம்.
இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த அனீஷின் (31) மனைவி கிரிஜாவும் இக்கூட்டத்திற்கு சென்று வருவராம். இதனை அனீஷ் விரும்பவில்லையாம். இது தொடர்பாக தனது மனைவியை அவர் கண்டித்துள்ளார். மேலும் ஜெபக்கூட்டம் நடத்தும் ஞானதாஸ் மற்றும் ஜெபசிங்கிடமும், தனது மனைவியை ஜெபக்கூட்டத்திற்கு அழைக்கக் கூடாது என்று கூறினராம். இதனால் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாம்.
இந்நிலையில், வியாழக்கிழமை ஜெபசிங் திருவட்டாறு பிலாங்காலவிளை வழியாக சென்ற போது அனீஷ் மற்றும் 4 பேர் சேர்ந்து ஜெபசிங்கை தடுத்து நிறுத்தி, அவரை தாக்கி கத்தியால் குத்தினராம். இதில் காயமடைந்த ஜெபசிங்கை அப்பகுதியிலுள்ளவர்கள் மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து ஞானதாஸ் கொடுத்த புகாரையடுத்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.