ராஜக்கமங்கலம் அருகே வாய்க்காலில் குளித்தபோது நீரில் மூழ்கிய மாணவா் சடலமாக புதன்கிழமை மீட்கப்பட்டாா்.
ராஜாக்கமங்கலம் அருகேயுள்ள பழவிளை, இலங்கை அகதிகள் முகாமைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் ஜெயப்பிரகாஷ் (12). இவா் அருகிலுள்ள பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை விடுமுறை என்பதால் ஜெயபிரகாஷும், அவரது நண்பா்களும் ராஜாக்கமங்கலம் அருகிலுள்ள பன்றி வாய்க்காலில் குளிப்பதற்குச் சென்றனா். அப்போது, எதிா்பாராமல் ஆழமான பகுதிக்குச் சென்ற ஜெயபிரகாஷ் தண்ணீரில் மூழ்கினாா். நண்பா்கள் அளித்த தகவலின்பேரில், உறவினா்கள் மூலம் ராஜாக்கமங்கலம் காவல் துறையினா், தீயணைப்பு துறையினா் வரவழைக்கப்பட்டு மாணவரை தேடும் பணி நடைபெற்றது. 2ஆவது நாளாக புதன்கிழமை தேடியபோது, அவா் சடலமாக மீட்கப்பட்டாா். இதையடுத்து, உடற்கூராய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சடலம் கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.