குமரி மாவட்டத்தின் நீராதாரத்தின் ஜீவ நாடியாகத் திகழும் பேச்சிப்பாறை அணையைக் கட்டிய பொறியாளர் ஹம்ரே அலெக்சாண்டர் மிஞ்சினின் 106 ஆவது நினைவு தினம் புதன்கிழமை (செப். 25) அனுசரிக்கப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தின் நீராதாரத்தின் ஜீவ நாடியாகத் திகழும் பேச்சிப்பாறை அணை திருவிதாங்கூர் மன்னர் ஸ்ரீமூலம் திருநாள் மார்த்தாண்ட வர்மா மகாராஜா காலத்தில் 1869-1906 ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்டதாகும்.
இந்த அணையைக் கட்டும் பணியில் இங்கிலாந்து நாட்டுப் பொறியாளர்கள், திருவிதாங்கூர் நாட்டின் பொறியாளர்கள் பலர் ஈடுபட்டனர். இதில் முக்கியப் பொறியாளராக பணியாற்றி மன்னர் மனதிலும், மக்கள் மனதிலும் இடம் பிடித்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பொறியாளர் ஹம்ரே அலெக்சாண்டர் மிஞ்சின் ஆவர். இவர் 1913 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி மறைந்தார்.
அலெக்சாண்டர் மிஞ்சினின் நினைவிடம் பேச்சிப்பாறை அணையின் அருகில் உள்ளது. இந்த நினைவிடத்தில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதி பொதுப்பணித்துறையினர் மற்றும் விவசாயிகள் மலரஞ்சலி செலுத்துகின்றனர்.
இந்த ஆண்டும் அவரது 106 ஆவது நினைவு தினத்தையொட்டி புதன்கிழமை பொதுப்பணித்துறையினர், விவசாயிகள், நாம் தமிழர் கட்சியினர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்துகின்றனர்.