மாநிலங்களை மத்திய அரசு இதுவரை கட்டுப்படுத்தியதில்லை என்றார் மத்திய இணை அமைச்சரும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளருமான பொன். ராதாகிருஷ்ணன்.
நாகர்கோவிலை அடுத்த கேசவன்புதூர் பகுதியில் வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டி:
தமிழ்நாட்டை தமிழன் ஆளவேண்டும் என ராகுல் கூறுகிறார். தற்போது தமிழகத்தை ஆட்சி செய்து வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பச்சைத்தமிழன். பிறகு புதிதாக எங்கிருந்து யாரை கொண்டுவருவார்கள்?
மோடி சர்வாதிகார ஆட்சி செய்கிறார் என்று ஸ்டாலின் கூறுகிறார். யாருடைய ஆட்சியில் எமர்ஜென்சி கொண்டுவரப்பட்டது என்பதை தெரிந்துகொண்டால், சர்வாதிகார ஆட்சி யாருடையது என்பது தெரியும்.
தேர்தல் ஆணையம் தொடர்ந்து எதிர்க்கட்சியினர் மீதே நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதே என்கிறீர்கள். யாரிடம் நோய் உள்ளதோ அவர்களுக்குத்தானே அறுவைச் சிகிச்சை நடக்கும். மாநிலங்களை மத்திய அரசு இதுவரை கட்டுப்படுத்தியதில்லை. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் எத்தனை மாநிலங்களில் ஆட்சியை கலைத்தார்கள் என்பது தெரியும் என்றார் அவர்.