களியக்காவிளை அருகே மதுக்குடிக்க பணம் தர மறுத்த மனைவியை எரித்துக் கொல்ல முயன்றதாக, அவரது கணவரை போலீஸார் கைது செய்தனர்.
களியக்காவிளை அருகேயுள்ள தெற்றிக்குழி, மேக்கேதட்டுவிளை பகுதியைச் சேர்ந்த தாவீது மகன் கிறிஸ்டோபர். தொழிலாளி. இவரது மனைவி வினிதா. இத்தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளன. கிறிஸ்டோபருக்கு மதுக்குடிக்கும் பழக்கம் உள்ளதாம். மேலும், அவர் அடிக்கடி மதுக்குடித்துவிட்டு, மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தாராம்.
இந்த நிலையில் அவர், திங்கள்கிழமை மதுக்குடிக்க மனைவியிடம் பணம் கேட்டாராம். அதற்கு, வினிதா மறுத்தாராம். இதையடுத்து, வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து வினிதா மீது ஊற்றி கிறிஸ்டோபர் தீ வைத்தாராம். இதில் பலத்த காயமடைந்த அவரை, உறவினர்கள் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து பளுகல் போலீஸார் வழக்குப் பதிந்து, கிறிஸ்டோபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.