சாத்தான்குளம் பேருந்து நிலைய கழிப்பறையிலிருந்து கழிவுகளை ஓடையில் திறந்து விடுவதால், சுகாதாரச் சீர்கேடு உருவாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சாத்தான்குளம் புதிய பேருந்து நிலையத்தில் பேரூராட்சி வணிக வளாகம் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் உள்ள கடைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில் ஓடை அமைக்கப்பட்டு அமராவதி ஓடையில் இணைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறையின் கழிவுநீர்த் தொட்டி நிரம்பியதால், அதிலிருந்து வெளியேறும் கழிவுகள் கழிவுநீரோடையில் திறக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
கழிவுநீரோடு கழிப்பறை கழிவுகளும் செல்வதால் மிகுந்த துர்நாற்றம் வீசுவதுடன், பொதுமக்கள், வியாபாரிகள் பெரிதும்
பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், சுகாதாரச் சீர்கேடுகள் உருவாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். எனவே, இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.