குமரி மாவட்டத்தில் அணைப் பகுதிகள் மற்றும் மலையோரப் பகுதிகளில் சனிக்கிழமை இரவு மற்றும் ஞாயிற்றுக்கிழமை காலையில் மிதமான சாரல் மழை பெய்தது.
மாவட்டத்தில் அணைகளில் நீர்மட்டம் வேகமாகச் சரிந்து வருகிறது. பாசனத்திற்கு மேலும் 2 மாதங்கள் தண்ணீர் வேண்டும் என்ற நிலையில், கன மழை பெய்து அணைகளில் குறிப்பிட்ட அளவுக்கு தண்ணீர் பெருகினால் மட்டுமே பாசனத்திற்கு தட்டுப்பாடின்றி தண்ணீர் வழங்க முடியும் என்ற நிலை உள்ளது.
இந்நிலையில் மாவட்டத்தில் அணைப் பகுதிகள் மற்றும் மலையோரப் பகுதிகளில் சனிக்கிழமை இரவு மற்றும் ஞாயிற்றுக்கிழமை காலையில் மிதமான சாரல் மழை பெய்தது.
அணைகளில் நீர்மட்டம்: ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 3.60 அடியாக இருந்தது. மேலும் அணைகளின் நீர்மட்டம் பெருஞ்சாணி அணையில் 27.85 அடியாகவும், சிற்றாறு 1 அணையில் 7.84 அடியாகவும், சிற்றாறு 2 அணையில் 7.93 அடியாகவும், பொய்கை அணையில் 6.80 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணையில் 34.78 அடியாகவும் இருந்தது.
பேச்சிப்பாறை அணையிலிருந்து விநாடிக்கு 307 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணையிலிருந்து விநாடிக்கு 312 கன அடி தண்ணீரும் பாசனக் கால்வாய்களில் சென்று கொண்டிருந்தது.
மழை அளவு: அதிகபட்சமாக பாலமோரில் 22.4 மி.மீட்டரும், பேச்சிப்பாறையில் 12 மி.மீட்டரும், கொட்டாரத்தில் 11.2 மி.மீட்டரும், பூதப்பாண்டியில் 10.2 மி.மீட்டரும் மழை பதிவாகியிருந்தது.