குலசேகரம் அருகே போலீஸார் சென்ற வாகனம் மோதி பெண் பலத்த காயமடைந்தார்.
திற்பரப்பு அருவியில் பாதுகாப்புப் பணிக்காக ஆயுதப்படைப்பிரிவு பெண் போலீஸார் மற்றும் சில போலீஸார் ஞாயிற்றுக்கிழமை திற்பரப்பு நோக்கி போலீஸ் வேன் ஒன்றில் சென்று கொண்டிருந்தனர்.
திற்பரப்பு மாஞ்சாக்கோணம் கொல்லாமூடு என்ற இடத்தில் சென்றபோது எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிடும்போது, அப்பகுதி வழியே நடந்து சென்று கொண்டிருந்த திற்பரப்பு பகுதியைச் சேர்ந்த ரெத்தினபாய் (65) மீது வேன் மோதியதாம். இதில் ரெத்தினபாய் பலத்த காயமடைந்தார். இந்நிலையில் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கையை போலீஸார் செய்யவில்லை என கூறப்படுகிறது. இது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
சுமார் 45 நிமிடங்களுக்குப் பிறகு ரெத்தினபாயின் மகன் ராகுல் சம்பவ இடத்துக்கு வந்து தாயை மீட்டு மார்த்தாண்டத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தார்.
இச்சம்பவம் தொடர்பாக குலசேகரம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.