குழித்துறை தாமிரவருணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அதன் தடுப்பணை மீது பாதசாரிகளும், இருசக்கர வாகனங்களும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
குழித்துறை தபால் நிலைய சந்திப்பிலிருந்து வெட்டுவெந்நி, மார்த்தாண்டம் பகுதிகளுக்கு நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் குழித்துறை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை வழியாக சென்று வருவது வழக்கம். இந்நிலையில், குமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பெய்துவரும் பலத்த மழையால் குழித்துறை தாமிரவருணி ஆற்றில் வெள்ளம் அதிகரித்துள்ளது. தற்போது தடுப்பணையை மூழ்கடித்து வெள்ளம் செல்வதால் இப் பகுதி வழியாக செல்லும் பொதுமக்கள் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்படும் நிலை உள்ளது.
எனவே, பொதுப் பணித்துறை நீராதாரப் பிரிவு சார்பில் தடுப்பணையின் இரு பகுதியிலும் குறுக்கே இரும்பு கம்பிகள் அமைத்து தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன்காரணமாக பொதுமக்கள் பெரும்பாலானோர் குழித்துறை சந்திப்பு சென்று வெட்டுவெந்நி, மார்த்தாண்டம் பகுதிக்கு சென்று வருகிறார்கள். ஆபத்தை உணராத சிலர் தடையை மீறி தடுப்பணையின் மீது நடந்து செல்வதையும் காண முடிகிறது.