நாகர்கோவிலில் பிஎஸ்என்எல் சார்பில் பொறியியல் பயின்ற இளைஞர்களுக்கான இலவச தொழில்நுட்பப் பயிற்சி திங்கள்கிழமை (ஆக.19) தொடங்குகிறது.
இது குறித்து, பி.எஸ்.என்.எல். நிறுவன நாகர்கோவில் முதன்மை பொதுமேலாளர் ஆர்.சஜூகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழக அரசு திறன் மேம்பாட்டுக் கழகம், நாகர்கோவில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் சார்பில் பி.இ. மற்றும் பி.டெக். படித்து வேலைஇல்லா இளைஞர்களுக்கான இலவச தொழில்நுட்பப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
அதன்படி, இன்பர்மேஷன் மற்றும் கம்யூனிகேஷன்ஸ் (Information and Communications Technology-ICT) பிரிவில் திங்கள்கிழமை ( ஆக. 19) முதல் தொடங்கி 8 வாரங்கள் நடைபெறுகிறது. பயிற்சியில் பங்கேற்கும் இளைஞர்களுக்கு ஊக்க தொகையாக தினமும் ரூ. 100 வழங்கப்படுகிறது.
இப்பயிற்சியில் சேர விரும்பும் இளைஞர்கள் நாகர்கோவில் வாட்டர் டேங்க் ரோட்டிலுள்ள தொலைபேசி நிலையத்தில் பட்டப்படிப்பு சான்று, ஆதார் அடையாள அட்டை, தினப்படியை பெறுவதற்கான தங்களது வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம் நகல், மார்பளவு உள்ள ஒரு புகைப்படம் ஆகியவற்றுடன் பதிவுசெய்து பயிற்சியில் நேரடியாக சேர்ந்து பயன்பெறலாம்.
அல்லது ஆன்லைன் முறையில் இணையதள முகவரி rgmttc.bsnl.co.in / jobportal யில் பொறியியல் பட்டதாரி இளைஞர்கள் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு, துணைக்கோட்டப் பொறியாளரை 9486102609 என்ற செல்லிடப்பேசி எண்ணிலும், 04652 - 279999 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் எனத்தெரிவிக்கப் பட்டுள்ளது.