தக்கலையில், தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் கன்னியாகுமரி மாவட்ட 3ஆவது மாநாடு புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி நடைபெற்ற பிரதிநிதிகள் மாநாட்டுக்கு, மாவட்டத் தலைவர் பி. அல்போன்ஸ் தலைமை வகித்து, தொடக்க நிகழ்ச்சியாக சங்கக் கொடியேற்றினார். பின்னர், தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட துணைத் தலைவர் எஸ். சிவதாணுபிள்ளை அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார். ஒரு நிமிடம் மெளனம் கடைப்பிடிக்கப்பட்டது.
கல்குளம் வட்டத் தலைவர் மற்றும் வரவேற்புக் குழுத் தலைவர் எஸ். ராமகிருஷ்ணன் வரவேற்றார். மாநில துணைத் தலைவர் பி. சுகுமாரன் பிரதிநிதிகள் மாநாட்டைத் தொடக்கிவைத்துப் பேசினார்.
மாவட்டச் செயலர் சி.எம். ஐவின், மாவட்ட பொருளாளர் கே. நடராஜன் ஆகியோர் அறிக்கைகள் வாசித்தனர்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தவேண்டும். ஓய்வூதியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்தவேண்டும். மருத்துவப்படியாக ரூ. ஆயிரம் வழங்க வேண்டும். நீர்நிலைகள், கால்வாய்களைத் தூர்வார வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர்ந்து, மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. மாவட்டத் தலைவராக பி. அல்போன்ஸ், துணைத் தலைவர்களாக பி. பீர்முகம்மது, எஸ். சிவதாணுபிள்ளை, எஸ். ராஜகோபால், என். தங்கமணி, செயலராக சி.எம். ஐவின், இணைச் செயலர்களாக கே. நரேந்திரன், வேதமணி, ஏ. சசிதரன், கே. சின்னத்துரை, பொருளராக கே. நடராஜன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநிலச் செயலர் ஏ. பக்கிரிசாமி, புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி, நிறைவுரையாற்றினார். வரவேற்புக் குழுச் செயலர் என். ராமசந்திரன் நன்றி கூறினார்.