குலசேகரம் புனித அகுஸ்தினார் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இத்திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை மாலையில் செபமாலை, நவநாள் செபங்கள் நடைபெற்றன. தொடர்ந்து நடைபெற்ற கொடியேற்று நிகழ்ச்சியில் ஆலயப் பங்குத் தந்தை ஜோன்ஸ் கிளீட்டஸ் அகுஸ்தினார் திருவுருவம் பதித்த கொடியை ஆலயத்திலிருந்து இறை மக்கள் சூழ எடுத்து வந்தார். தொடர்ந்து முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் கொடியை ஏற்றி வைத்தார். இதில் திரளான இறைமக்கள் பங்கேற்றனர்.
தொடர்ந்து முன்னாள் ஆயர் பீட்டர் ஜெமிஜியூஸ் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. இதில் ஆயர் செயலர் மார்ட்டின் மறையுரை நிகழ்த்தினார். சகாயமாதா அன்பியம் மற்றும் புனித அன்னை தெரசா அன்பியத்தினர் திருப்பலியை சிறப்பித்தனர்.
இந்த ஆலயத் திருவிழா தொடர்ந்து 10 நாள்கள் நடைபெறுகிறது. 2 ஆம் நாள் விழாவான சனிக்கிழமை மாலையில் நடைபெறும் திருப்பலிக்கு அருள்பணியாளர் அமல் ராஜ் தலைமை வகிக்கிறார். இதில் அருள்பணியாளர் சிலுவை எட்வின் மறையுரை நிகழ்த்துகிறார். இத்திருப்பலி நிகழ்ச்சியில் திருமுழுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 3 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலையில், நடைபெறும் திருவிழாவில் முதல் திருவிருந்து திருப்பலி நடைபெறுகிறது. தொடர்ந்து மாலையில் மறைக்கல்வி ஆண்டு விழா நடைபெறுகிறது.
இதர திருவிழா நாள்களில் தினமும் மாலையில் திருப்பலி நடைபெறுகிறது. விழா நிறைவு நாளான செப்டம்பர் 1 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு திருப்பலி நடைபெறுகிறது. குழித்துறை குருகுல முதல்வர் யேசு ரெத்தினம் தலைமை வகிக்கிறார். இத்திருப்பலியை பங்குப் பேரவையினர், பக்த சபை இயக்கத்தினர், நிதிக்குழுவினர் மற்றும் பாய்க்காடு, செறுதிக்கோணம் கிளை பங்குகள் சிறப்பிக்கின்றன. அதனைதத் தொடர்ந்து திருக்கொடியிறக்கம் நடைபெறுகிறது.
திருவிழா ஏற்பாடுகளை ஆலய பங்குத் தந்தை ஜோன்ஸ் கிளிட்டஸ், இணைப் பங்குத் தந்தை சகாய கென்னடி மற்றும் பங்கு மக்கள், அருள்பணிப் பேரவை, அருள்சகோதரிகள் செய்துள்ளனர்.