கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக குழாய் பதிக்கும் பணியினால் குலசேகரத்தில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ரூ. 110 கோடி மதிப்பிலான களியல்-அழகியபாண்டியபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு சாலை வழியாக குழாய் பதிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் குலசேகரம் பிரதான சாலையில் குழாய் பதிக்கும் பணிகள் கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இப்பணிகள் காரணமாக சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்தை ஒழுங்கு செய்யும் வகையில் குடிநீர் வடிகால் வாரியத்தினரோ, நெடுஞ்சாலைத் துறையினரோ அல்லது ஒப்பந்தத்தாரர் தரப்பினரோ இல்லாத நிலை காணப்படுகிறது. இதில் விடுமுறை நாளான வெள்ளிக்கிழமை ஏராளமான சுற்றுலா வாகனங்கள் இச்சாலையில் வந்தால், போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. இதில் 108 ஆம்புலன்ஸ் வாகனமும் சிக்கிக் கொண்டது.
இந்நிலையில் போக்குவரத்தை ஒழுங்கு செய்யவும், குழாய் பதிக்கப்பட்ட பிறகு சாலையில் ஒழுங்கற்று கிடக்கும் மண்ணை சமப்படுத்தி வாகனங்கள் எளிதில் செல்லவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.