நாகர்கோவில் பிஎஸ்என்எல் சார்பில் 4 ஜி சேவையை விஜயகுமார் எம்.பி. தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் கோவை, சேலம் நகருக்கு அடுத்து நாகர்கோவிலில் பிஎஸ்என்எல் 4 ஜி சேவை தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றறது. நிகழ்ச்சிக்கு, பிஎஸ்என்எல் நாகர்கோவில் முதன்மை பொதுமேலாளர் சஜிகுமார், தலைமை வகித்தார். நாகர்கோவில் தொலைத்தொடர்பு ஆலோசனைக் குழுத் தலைவர் அ.விஜயகுமார் எம்.பி. 4 ஜி
சேவையை தொடங்கி வைத்து பேசியது; தற்போது நாகர்கோவில் நகரப் பகுதியில் தொடங்கப்பட்டுள்ள 4 ஜி சேவையானது குமரி மாவட்டம் முழுவதும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் குடிநீர் பிரச்னையை தீர்க்க பொய்கை அணை திட்டம், தாடகை மலையில் இருந்து தண்ணீர் கொண்டுவரும் திட்டம் போன்றவற்றை செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இயற்கை சீற்றங்களால் காணாமல் போகும் மீனவர்களை கண்டுபிடிப்பதற்காக ஹெலிகாப்டர் தளம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்த மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படும் என்றார் அவர்.
பிஎஸ்என்எல் நாகர்கோவில் முதன்மை பொதுமேலாளர் சஜிகுமார் பேசும்போது, தற்போது தொடங்கப்பட்டுள்ள 4 ஜி சேவையை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். பிஎஸ்என்எல் செல்லிடப்பேசி வாடிக்கையாளர்கள் தங்களது பழைய சிம்மை 4 ஜி க்கு மாற்றுவது தொடர்பான எந்தவொரு விசாரணைக்கும் , உதவிக்கும் எந்த நேரத்திலும் தொலைபேசி எண் 04652-279077 உடன் செயல்படும் உதவி மையத்தை தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.
நிகழ்ச்சியில் துணைப் பொது மேலாளர்கள் ராஜன், அனிதா, டெல்பின்மேரி, கதிரேசன், தொலைபேசி ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் பாலகிருஷ்ணன், செல்லப்பா, கனகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.