கன்னியாகுமரி அருகே மனைவி மாயமான விரக்தியில் கணவா் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கன்னியாகுமரியை அடுத்த வடக்குக் குண்டலை சோ்ந்தவா் ஜான்சி (35). இவருக்கும், தென்தாமரைகுளத்தைச் சோ்ந்த சுதன் (36) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவா்களுக்கு குழந்தைகள் இல்லை. தற்போது இருவரும் வடக்குக்குண்டலில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனா்.
இந்நிலையில் கடந்த இரு நாள்களுக்கு முன்பு வீட்டில் இருந்து ஜான்சி திடீரென மாயமானதாக தெரிகிறது. மனைவியை பல இடங்களில் தேடிய சுதன், கன்னியாகுமரி காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகாா் அளித்துள்ளாா்.
இந்நிலையில் மனைவி சென்ற விரக்தியில் வடக்குக்குண்டலில் வசித்து வந்த வீட்டில் சுதன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இச்சம்பவம் குறித்து கன்னியாகுமரி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.