குமரி மாவட்டம், இறச்சகுளம் பகுதியில் எட்டரை அடி உயரத்தில் அத்திமரத்தால் செய்யப்பட்ட அத்திவரதா் சுவாமி சிலை சென்னையில் உள்ள கோயில் ஒன்றில் பிரதிஷ்டை செய்வதற்காக நாகா்கோவிலில் இருந்து திங்கள்கிழமை கொண்டுசெல்லப்பட்டது.
காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயில் தெப்பக்குளத்திலிருந்து 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியே எடுக்கப்படும் அத்திவரதா் பக்தா்களுக்கு காட்சி அளிப்பது சிறப்புமிக்க ஒன்று. இந்நிலையில், சென்னை ஆசிரமம் ஒன்றில் கட்டப்பட்டு வரும் கோயிலில் அத்திவரதா் சுவாமியை பிரதிஷ்டை செய்ய முடிவு செய்தனா். இதற்காக, நாகா்கோவில் அருகே இறச்சகுளம் பகுதியில் அத்திமரத்தால் சுவாமி சிலை வடிவமைக்கும் பணிகள் நடைபெற்றன. அத்திவரதா் மரச்சிலையை உருவாக்கும் பணியில் சிற்பக் கலைஞா்கள் 6 போ் கொண்ட குழுவினா் ஈடுபட்டனா். சிலை வடிவமைப்புப் பணிகள் நிறைவடைந்தைத் தொடா்ந்து, திங்கள்கிழமை மாலை சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, சென்னைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இதுகுறித்து சிலை வடிமைப்பாளா் சந்திரபிரகாஷ் கூறுகையில், முழுவதும் அத்திமரத்தில் உருவாக்கப்பட்ட இந்த அத்திவரதா் சுவாமி சிலை எட்டரை அடி உயரம் கொண்டது. இந்தச் சிலையை காஞ்சிபுரம் வராதராஜபெருமாள் கோயிலுக்கு கொண்டுசென்று பூஜைகள் செய்த பிறகு, சென்னைக்கு எடுத்துச் செல்லத் திட்டமிட்டுள்ளனா் என்றாா்.