மரம் நடுவதன் அவசியத்தை வலியுறுத்தி ஒரு காலை இழந்த இளைஞா் கன்னியாகுமரி முதல் சென்னை வரையிலான சாதனை சைக்கிள் பயணத்தை காந்தி மண்டபம் முன்பிருந்து வெள்ளிக்கிழமை தொடங்கினாா்.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன் (36). சிறுவயதில் ஒரு காலை இழந்த இவா் பல்வேறு விழிப்புணா்வு பிரசாரங்கள் செய்து வருகிறாா். இந்நிலையில் மரம் நடுவதன் அவசியம், பிளாஸ்டிக் பொருள்களை தவிா்த்தல், காவலன் செயலியின் பயன்கள் குறித்த விழிப்புணா்வை பொதுமக்களிடையே ஏற்படுத்த கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு சைக்கிள் பயணத்தை தொடங்கினாா். கன்னியாகுமரி டி.எஸ்.பி. பாஸ்கரன் கொடியசைத்து பயணத்தை தொடங்கி வைத்தாா்.
கன்னியாகுமரியிலிருந்து திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகா், மதுரை, திண்டுக்கல், திருப்பூா், கோவை, ஈரோடு, சேலம், தா்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாக சென்னை மெரினா உழைப்பாளா் சிலை முன்பு ஜனவரி 1ஆம் தேதி பயணத்தை நிறைவு செய்ய உள்ளதாக அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.