குழித்துறை அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் பெண் உயிரிழந்தார்.
திருவட்டாறு அருகேயுள்ள மேலே பிலாங்காலை பகுதியைச் சேர்ந்தவர் புல்பாஸ் (38). இவரது மனைவி மேரி செலஸ்டின் (32). இத் தம்பதிக்கு அக்ஷயா, அக்ஷித் என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.
இத் தம்பதியினர் தங்களது இரு குழந்தைகளுடன் செவ்வாய்க்கிழமை மோட்டார் சைக்கிளில் களியக்காவிளை நோக்கி சென்று கொண்டிருந்தனராம். குழித்துறை பகுதியில் வந்தபோது, பின்னால் வந்த அரசுப் பேருந்து மோதியது. இந்த விபத்தில் தூக்கிவீசப்பட்டு பலத்த காயமடைந்த மேரி செலஸ்டின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த புல்பாஸ் மற்றும் இரு குழந்தைகளையும் அப்பகுதியினர் மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த விபத்து குறித்து களியக்காவிளை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மற்றொரு சம்பவம்: கேரள மாநிலம் நெய்யாற்றின்கரை வட்டம், அயிரா பகுதியைச் சேர்ந்த பாபு மகன் சதீஷ் (21). இவர் கடந்த இருநாள்களுக்கு முன் கொல்லங்கோடு அருகே ஊரம்பு பகுதியிலுள்ள தனது நண்பர் ஒருவரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாராம். மங்குழி பகுதியில் சென்றபோது, சிறுவன் ஒருவன் சாலையை கடக்க முயன்றதையடுத்து திடீரென பிரேக் பிடித்தாராம். இதில் மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி கீழே விழுந்த சதீஷ் பலத்த காயமடைந்தார். அவரை அப்பகுதியினர் மீட்டு திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தார்.இதுகுறித்து கொல்லங்கோடு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.