பொங்கல் விடுமுறையை முன்னிட்டு திற்பரப்பு அருவியில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.
நிகழாண்டு பொங்கல் விடுமுறை நாள்கள் தொடர்ச்சியாக வந்ததால், குமரி மாவட்ட சுற்றுலாத் தலங்களில் வெளி மாவட்ட சுற்றுலாப் பயணிகள் கடந்த சனிக்கிழமை முதலே குவிந்து வருகின்றனர்.
இந்நிலையில் புதன்கிழமை அருவிப் பகுதியெங்கும் வெள்ளம் போல் சுற்றுலாப் பயணிகள் காணப்பட்டனர். மாவட்டத்தில் தற்போது வறட்சியான கால நிலையே நிலவி வரும் நிலையில் அருவியில் மிதமான அளவில் தண்ணீர் கொட்டுகிறது.
இதனால் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர். இதே போல் மாத்தூர் தொட்டில் பாலத்துக்கும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர்.
சரக்கு வாகனங்களில்... பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகள், வேன்கள், கார்கள், ஜீப்புகளில் சுற்றுலாப் பயணிகள் வந்த நிலையில், சரக்கு வாகனங்களான சுமை ஆட்டோ, மினி லாரிகளில் சுமை ஏற்றும் பகுதியில் தார்பாய்களை விரித்து அதில் உட்கார்ந்தவாறு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இதில் பலர் சிறு தொழிற்கூடங்களில் பணியாற்றும் தொழிலாளர்களாக உள்ளனர்.
இந்நிலையில் வியாழக்கிழமை காணும் பொங்கல் தினமாக உள்ள நிலையில் நீர் நிலை சார்ந்த சுற்றுலாத் தலங்களில் மேலும் அதிகமான அளவில் சுற்றுலாப் பயணிகள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.