குமரி மாவட்டத்தில் சுசீந்திரம் பகுதியில் குடிநீர் விநியோகத்தினை முறைப்படுத்துவது குறித்து பேரூராட்சி அதிகாரிகளுடன் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம் புதன்கிழமை ஆலோசனை மேற்கொண்டார்.
குமரி மாவட்டத்தில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை சீரமைக்க தமிழக அரசு பல்வேறு மாற்று ஏற்பாடுகளை செய்துவருகிறது. சுசீந்திரம் பேரூராட்சி பகுதியில் தண்ணீர் பிரச்னை குறித்து புதன்கிழமை பேரூராட்சி அதிகாரிகளுடன் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம் ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில் அவர் பேசியது; சுசீந்திரம் பிரசித்தி பெற்ற ஆன்மிக தலமாகவும், சுற்றுலா தலமாகவும் திகழ்கிறது. எனவே இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வண்ணம் குடிநீர் பிரச்னையில் கவனம் செலுத்த வேண்டும். சுசீந்திரம் குளத்தில் பாசி படர்ந்து துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். இது குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று குளத்தை தூர்வார நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தற்காலிகமாக குளத்தின் தண்ணீரை மாற்றவும், பாசிகளை நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பழையாற்றில் உள்ள ஆகாய தாமரைகளை அகற்றுவது குறித்தும் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.