திருக்குறளின் 1330 குறள்பாக்களையும் மனனம் செய்து ஒப்பித்த மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
நாகர்கோவில் குறளகத்தின் சிந்தனை முற்றக் கூட்டத்துக்கு நல்லூர் திருவள்ளுவர் குருபூஜை மன்றப் பொறுப்பாளர் மாணிக்கவாசகம் தலைமை வகித்தார். விசுவ இந்து பரிஷத் மாநிலத் தலைவர் ரத்தினசாமி, அண்ணா கல்லூரி முன்னாள் முதல்வர் ஆபத்துகாத்தபிள்ளை, தமிழ்செம்மல் விருதாளர் ஆல்பென்ஸ் நத்தானியேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், நிகழ் கல்வி ஆண்டில் 1330 குறள்பாக்களுக்கான மனனப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகள் கவின்மா, சங்கரி, 800 குறள் பாக்களுக்கான மனனப்போட்டியில் வெற்றி பெற்ற ஜெபிஷா, ஆகியோருக்கு பரிசளிக்கப்பட்டது.
மனித வள மேம்பாட்டுத் தியான மன்ற நிறுவனர் பழனிசுவாமிகள் பரிசுகளை வழங்கினார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பிருந்தா வாழ்த்திப் பேசினார். மனிதவள ஆங்கில பயிற்சி மைய பேராசிரியர் பழனி திருக்குறளில் காலமறிதல் என்ற அதிகார தலைப்பில் பேசினார். விழாவில் தமிழ்நல மன்றம் கவிஞர் சுயம்புலிங்கம், இறைஞானலாயம் சுப்பிரமணியபிள்ளை, பிரம்ம ஞான சங்கம் பொன்.மகாதேவன், திருக்குறள் கூட்டமைப்பு மாவட்டத் தலைவர் சிவநாராயணபெருமாள், எழுத்தாளர் பட்டத்தி மைந்தன், ஒளிவெள்ளம் பிதலிஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அமைப்பின் நிறுவனர் தமிழ்க்குழவி வரவேற்றார். குமரி எழிலன் நன்றி கூறினார்.