கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகே பெண்ணின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 21 ஆயிரத்தை திருடியவரை போலீஸார் தேடிவருகின்றனர்.
கருங்கல் அருகே எட்டணி சிங்கம்பாறவிளை பகுதியைச் சேர்ந்த வென்சஸ்லாஸ் மனைவி பிரேமலதா (44). இவரது, கணவர் வெளிநாட்டில் வேலைசெய்து வருகிறார். வெள்ளிக்கிழமை பிரேமலதாவின் செல்லிடப்பேசிக்கு ஒரு அழைப்பு வந்ததாம்.
வங்கியிலிருந்து பேசுவதாக தெரிவித்த அந்த நபர் பிரேமலதாவின் ஏடிஎம் அட்டை காலாவதியாகிவிட்டதாகவும், புதியஏடிஎம் அட்டை வழங்க வேண்டும் எனவும், தங்களது செல்லிடப்பேசிக்கு வந்த குறுந்தகவலில் இருக்கும் குறியீடு எண்களை தெரிவிக்குமாறும் குறிப்பிட்டாராம்.
இதையடுத்து, பிரேமலதா செல்லிடப்பேசிக்கு வந்திருந்த குறுந்தகவலில் இருந்த குறியீடு எண்களை தெரிவித்தாராம். அடுத்த சில நிமிஷங்களில் பிரேமலதாவின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 21 ஆயிரம் எடுக்கப்பட்டதற்கான குறுந்தகவல் வந்தது. இதில், அதிர்ச்சியடைந்த அவர், வங்கிக் கணக்கை ஆய்வு செய்தபோது ரூ. 21 ஆயிரம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
புகாரின்பேரில், கருங்கல் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.