கன்னியாகுமரி மாவட்டத்தில் 16 பள்ளிகளில் ரூ. 12 லட்சம் மதிப்பில் சீர்மிகு வகுப்புகளை (ஸ்மார்ட் கிளாஸ்) அ.விஜயகுமார் எம்.பி. அண்மையில் திறந்து வைத்தார்.
அவர், மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பள்ளிகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்க 12 லட்சத்து 40 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்தார். இதன்படி, மாவட்டத்தில் உள்ள எட்டாமடை அருகேயுள்ள போற்றியூர் அரசு உயர்நிலைப்பள்ளி, அனந்தபுரம், பெருமாள்புரம், குமாரபுரம், மாதவபுரம், இலந்தையடிவிளை, வடக்குதாமரைகுளம், மேலசூரங்குடி, ஆலங்கோட்டை, மண்டைக்காடு, இலப்பவிளை, பேயன்குழி, வேம்பனூர், குலசேகரபுரம் அரசு உயர்நிலைப் பள்ளிகள், நாகர்கோவில் எஸ்எல்பி அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் தலா ரூ. 77, 500 செலவில் சீர்மிகு வகுப்பறைகள் அமைக்கப்பட்டன.
அவற்றைத் திறந்துவைத்து எம்.பி. பேசுகையில், மாணவர்கள் கல்வி அறிவில் சிறந்து விளங்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே ஸ்மார்ட் கிளாஸ் தொடங்கப்பட்டு வருகின்றன. இது மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
எனது மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து ஏற்கெனவே பல அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஸ்மார்ட் கிளாஸ் அமைத்திட தொடர்ந்து நிதி ஒதுக்கீடு செய்ய உள்ளேன் என்றார் அவர்.
நிகழ்ச்சியில், கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் வள்ளிவேலு, ரகுபதி, சுரேஷ், கார்த்திக், அதிமுக நிர்வாகிகள் கனகராஜ், சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.