குமரி மாவட்டத்தில் மக்கள் பாதை இயக்கம் சார்பில் தாய் மண் திட்டத்தின் மூலம் 1 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தை பசுமை நிறைந்த மாவட்டமாக மாற்றும் முயற்சியாக மாவட்டம் முழுவதும் 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் நோக்கில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ராஜாக்கமங்கலம் அளத்தங்கரை கபடி விளையாட்டு திடல் பூங்காவில் புங்க மரக்கன்றுகளைசெவ்வாய்க்கிழமை நடவு செய்தனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் தாய் மண் திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்டோ பிரபாகர் கூறியது:
மக்கள் பாதை இயக்கம் சகாயம் ஐஏஎஸ் வழிகாட்டுதலின்படி செயல்பட்டு வருகிறது. அதன்படி, குமரி மாவட்டத்தை பசுமை நிறைந்த மாவட்டமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தாய் மண் திட்டத்தை தொடங்கியுள்ளது.
மாவட்டம் முழுவதும் அந்தந்த பகுதி மண்ணுக்கேற்ற மரங்களை தேர்வு செய்து மரக்கன்றுகளை நடவு செய்து வருகிறோம். கடந்த 1 மாதத்துக்குள் 700 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடவு செய்துள்ளோம். ராஜாக்கமங்கலம் அளத்தங்கரை கபடி விளையாட்டு திடல் பூங்கா பகுதியில் உள்ள மண்ணில் வளரும் தன்மை கொண்ட
50 புங்க வகை மரக்கன்றுகள் நடவு செய்துள்ளோம். தொடர்ந்து பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் இயற்கை ஆர்வலர்கள் உள்ள பகுதிகளை தேர்ந்தெடுத்து நடவு செய்தும், கண்காணித்தும் வருகிறோம். 1 லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்து குமரி மாவட்டத்தை பசுமை நிறைந்த மாவட்டமாக மாற்றுவதே எங்கள் திட்டத்தின் நோக்கம். மேலும் விதை பந்துகள் தயாரித்தும் மாவட்டத்தில் பல பகுதிகளில் வீசி வருகிறோம் என்றார் அவர்.
நிகழ்ச்சியில், இணை ஒருங்கிணைப்பாளர் சகாய சதீஷ் முன்னிலை வகித்தார். துணை ஒருங்கிணைப்பாளர்கள் செல்வதாஸ், ஜெயராஜ், திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சுபின்,ராஜன், ராஜேந்திரன், ஜெரின், ஹெலன், அளத்தங்கரை கபடி விளையாட்டு திடல் ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.