பத்மநாபபுரம் நகராட்சியில் 86 வணிக நிறுவனங்களில், நகராட்சி ஆணையர் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்து 32 கிலோ தடைவிதிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்தார். மேலும், கடை உரிமையாளர்களுக்கு ரூ. 6,200 அபராதம் விதிக்கப்பட்டது.
பத்மநாபபுரம் நகராட்சிக்குள்பட்ட தக்கலை சந்தைச் சாலை, அரண்மனைச் சாலை, இரணியல் சாலை, புலியூர்குறிச்சி ஆகிய பகுதிகளில் உள்ள 86 வணிக நிறுவனங்களில் நகராட்சி ஆணையர் மூர்த்தி தலைமையில் துப்புரவு அலுவலர் ராஜாராம் , துப்புரவு ஆய்வாளர் முத்துராமலிங்கம், மேற்பார்வையாளர் மோகன் மற்றும் பணியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, பிளாஸ்டிக் கப்புகள், உறிஞ்சும் குழல்கள், பைகள் என 32 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், கடை உரிமையாளர்களிடமிருந்து மொத்தம் ரூ.6, 200 அபராதம் வசூலிக்கப்பட்டது. தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை மீண்டும் பயன்படுத்துவது தெரியவந்தால் கூடுதல் அபராதம் விதிக்கப்படுவதுடன், கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையர் எச்சரித்தார்.