தாழக்குடியில் டாஸ்மாக் மதுக் கடையில் காவலாளியை தாக்கி மதுபாட்டில்களை திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.
தாழக்குடி சந்தைவிளை அருகே டாஸ்மாக் மதுக் கடையில் குமார் என்பவர் மேற்பார்வையாளராகவும், ராஜேஷ், சுரேஷ், விஜி ஆகியோர் விற்பனையாளர்களாகவும் பணிபுரிந்து வருகின்றனர். மேலும், இரவு நேரத்தில் கடைக்கு காவலாளியாக அப்பகுதியை சார்ந்த பாஸ்கர் என்பவரை வேலைக்கு அமர்த்தி இருந்தனராம்.
இந்நிலையில் வியாழக்கிழமை இரவு கடையை அடைத்துச் சென்ற பின்பு, அங்கு வந்த மர்ம நபர்கள் பாஸ்கரை தாக்கிவிட்டு கடையில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்தி, கதவை உடைத்து உள்ளே சென்று, அங்கிருந்த மதுபாட்டில்களை சாக்கு மூட்டையில் கட்டி திருடிச் சென்றனராம்.
இது குறித்து ஆரல்வாய்மொழி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.