நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த 3 நாள்களில் 28 புகார்கள் வந்துள்ளன.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நாஞ்சில் கூட்ட அரங்கில் தேர்தல் புகார்கள் தொடர்பான தகவல் தெரிவிப்பதற்காக கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் 1950 என்ற தொலைபேசி எண்ணில் தேர்தல் தொடர்பாக 24 மணி நேரமும் புகார் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 13 ஆம் தேதி முதல் செயல்பட்டு வரும் இந்த தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த 3 நாள்களில் 28 புகார்கள் வந்துள்ளன.
இதில் அரசு சுவர்களில் கட்சி விளம்பரங்கள் செய்திருந்தது, சுவரொட்டி மற்றும் கட்சிக் கொடி கம்பங்களை அகற்றுவது பற்றிய புகார்களாக இருந்தன. பத்மநாபபுரம் தொகுதியிலிருந்து அதிகபட்சமாக 20 புகார்கள் வந்திருந்தன. கன்னியாகுமரி தொகுதியில் 3 புகார்களும், விளவங்கோடு தொகுதியில் 4 புகார்களும், நாகர்கோவில் தொகுதியில் இருந்து ஒரு புகாரும் வந்திருந்தன.
தேர்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் அதில் செயல்பட்டு வரும் ஊடகப் பிரிவினை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான பிரசாந்த் மு.வடநேரே பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ரேவதி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மா.சுகன்யா ஆகியோர் உடனிருந்தனர்.