தேர்தல் தொடர்பான விளம்பரங்களை உள்ளூர் தொலைக்காட்சிகளில் வெளியிட அனுமதி பெற வேண்டும் என்றார் ஆட்சியரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவருமான பிரசாந்த் மு.வடநேரே.
தேர்தல் நடத்தை விதிகளை தனியார் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கடைப்பிடிப்பது குறித்து ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஆட்சியர் பேசியது: பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியாகும் தேர்தல் தொடர்பான விளம்பரங்கள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதற்காக கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஆகவே, பதிவு செய்துள்ள தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகள் தனியார் தொலைக்காட்சிகளில் தேர்தல் பிரசாரம் தொடர்பான விளம்பரங்களை ஒளிபரப்புவதற்கு 3 தினங்களுக்கு முன்பு மாவட்ட தேர்தல் அலுவலர், உதவி தேர்தல் அலுவலருக்கு விண்ணப்பித்து முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும். முன் அனுமதி பெற்ற விவரத்தினை உறுதி செய்த பின்னர்தான் விளம்பரங்கள் ஒளிபரப்ப வேண்டும்.
பதிவு செய்யாத அரசியல் கட்சிகளின் விளம்பரங்களை ஒளிபரப்பு செய்ய 7 நாள்களுக்கு முன்பாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் ஒளிபரப்பும் விளம்பரத்தின் 2 நகல்கள் மின்னணு வடிவில் இணைக்க வேண்டும். தேர்தல் தொடர்பான விளம்பரங்களில் எந்தவொரு அரசியல் கட்சியையோ, தனி நபரையோ தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்யும் வகையில் வாசகங்கள் இடம்பெறக் கூடாது என்றார் அவர்.