குலசேகரம் பகுதியில் பிஎஸ்என்எல் செல்லிடப்பேசிகளுக்கான சிக்னல் கிடைக்காததால் வாடிக்கையாளர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இம்மாவட்டத்தின் பல பகுதிகளில் கடந்த சில மாதங்களாக பிஎஸ்என்எல் செல்லிடப்பேசி கோபுரங்களிலிருந்து சரியான அளவில் சிக்னல் கிடைக்காததால் வாடிக்கையாளர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். ஒரு செல்லிடப்பேசியிலிருந்து மற்றொரு செல்லிடப்பேசிக்கு அழைப்பதற்கான இணைப்பு கிடைக்காமலும், இணைப்பு கிடைத்தாலும் அது துண்டிக்கப்படுவதுமாக தொடர்ந்து உள்ளது.
செல்லிடப்பேசி கோபுரங்களுக்கு செல்லும் மின் இணைப்பு துண்டிக்கப்படுவதாலேயே செல்லிடப்பேசி கோபுரங்கள் செயல்படாமல் முடங்குவதாக கூறப்படுகிறது. மாவட்டத்தில் குலசேகரம் அருகே கொல்லாறை-கரிப்பால் நகர் பகுதியிலுள்ள செல்லிடப்பேசி கோபுரம் கடந்த சில நாள்களாக இயங்காமல் உள்ளதால், இப்பகுதி வாடிக்கையாளர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதுபோன்று குலசேகரம் தொலைபேசி நிலையத்திலிருந்து தரைவழி தொலைபேசி இணைப்புகள் வழியாக அகண்ட அலை வரிசையும், அண்மை மாதங்களாக நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கான வேகம் இல்லாமலும், இணையம் அடிக்கடி துண்டிக்கப்படுவதுமாக உள்ளது. இதனால் இணையத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பிஎஸ்என்எல் செல்லிடப்பேசி மற்றும் அகண்ட அலைவரிசையில் நிலவும் குறைகளை விரைவில் சரி செய்து, வாடிக்கையாளர்களுக்கு துரித சேவை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.