கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை அருகே காட்டெருமை தாக்கியதில் தொடர்ந்து சிகிச்சையில் இருந்த ரப்பர் கழக பெண் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தார்.
அரசு ரப்பர் கழகம் சிற்றாறு குடியிருப்பில் வசித்து வருபவர் கிருஷ்ணன். இவரது மனைவி சந்திரா (44). இத்தம்பதி ரப்பர் கழக சிற்றாறு கோட்டத்தில் பால்வடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். 2018 இல் டிசம்பர் மாதம் சந்திரா, சிற்றாறு கூப்பு எண் 15 பகுதியில் ரப்பர் மரங்களிலிருந்து பால் வடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாராம்.
அப்போது, அங்கு திடீரென வந்த காட்டெருமை சந்திராவை தாக்கியது. இதில், முதுகுப் பகுதியில் பலத்த காயமடைந்த சந்திராவுக்கு குலசேகரத்தில் தனியார் மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது. இதையடுத்து, தீவிர சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சந்திரா திங்கள்கிழமை இறந்தார். இவருக்கு கல்லூரியில் பயிலும் ஒரு மகளும், பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற ஒரு மகளும் உள்ளனர். சந்திரா உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ரப்பர் கழக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.