ஆரல்வாய்மொழி அருகே சாலையில் கிடந்த மலைப்பாம்பு மீட்கப்பட்டது.
ஆரல்வாய்மொழி மலைகள் சூழ்ந்த வனப் பகுதியாக உள்ளதால் இங்கிருந்து காட்டுப் பன்றி, மலைப்பாம்பு உள்ளிட்ட விலங்குகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்துவிடும். இந்நிலையில், புதன்கிழமை இரவு, ஆரல்வாய்மொழி குருசடி தேவசகாயம் மவுண்டு செல்லும் வழியில் கோட்டைக்கரை பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நான்குவழிச் சாலையில் 9 அடி நீள மலைப்பாம்பு கிடந்தது.
அவ்வழியே சென்ற இளைஞா்கள் நாககுமாா், ஐசக் ஆகியோா், இதுகுறித்து வனத் துறைக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் அளித்தனா். மேலும், அந்தப் பாம்பின் மீது வாகனங்கள் மோதாமலிருக்குமாறும் பாதுகாப்பாக நின்றனா்.
தகவலின்பேரில் சக்திவேல் உள்ளிட்ட தீயணைப்பு வீரா்கள் சென்று, பாம்பைப் பிடித்து ஆரல்வாய்மொழி வனத் துறை சோதனைச் சாவடியில் ஒப்படைத்தனா். வன ஊழியா்கள் அந்தப் பாம்பை பொய்கை அணைப் பகுதியில் விட்டனா்.