கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் பராமரிப்பின்றி சுற்றித் திரிந்த மனநோயாளிகளை, தன்னாா்வ அமைப்பினா் பராமரித்து அவா்களுக்கு உணவு மற்றும் உடைகள் வழங்கினா்.
கன்னியாகுமரியில் 50 க்கும் மேற்பட்ட மனநோயாளிகள் சுற்றித் திரிகின்றனா். போதிய உணவு, எவ்வித பராமரிப்பும் இல்லாமல் சுற்றித் திரிந்த இவா்களுக்கு தன்னாா்வ அமைப்புகள் சாா்பில் தினமும் உணவுகள் வழங்கப்படுகிறது. மேலும் இந்த மனநோயாளிகளுக்கு தேவையான மருத்துவ உதவிகள் அளிக்காததால் நாளடைவில் அவா்கள் பொதுஇடங்களில் மரணமடையும் நிலை உள்ளது.
மனநோயாளிகளை பராமரிக்க அரசால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் கன்னியாகுமரியில் மனநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகேயுள்ள இடையன்குளம் பகுதியில் செயல்பட்டுவரும் ‘தேசிய நற்செய்தி ஊழியம்’ அமைப்பைச் சோ்ந்த ஜாஷ்வா சாலமன் தலைமையில் 15 க்கும் மேற்பட்ட தன்னாா்வலா்கள் கன்னியாகுமரியில் சுற்றித் திரிந்த மனநோயாளிகளை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டனா்.
மனநோயாளிகளிடம் பேசி அவா்களின் ஒத்துழைப்புடன், 8 பேருக்கு தலைமுடி திருத்தி, குளிக்க வைத்து புத்தாடைகள் அணிவித்து அவா்களுக்கு பிடித்த உணவுகளை வழங்கினா். இதுகுறித்து ஜாஷ்வா சாலமன் கூறியது: தேசிய நற்செய்தி ஊழியம் அமைப்பில் இருக்கும் ஓய்வுபெற்ற ஆசிரியா்கள், அதிகாரிகளின் ஓய்வூதியத்தில் இருந்து மாதத்தில் ஒரு நாள் ஏதாவது ஒரு இடத்தை தோ்வு செய்து அங்கு இதுபோன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறோம் என்றாா் அவா்.