ஆந்திர மாநில முதல்வா் ஜெகன் மோகன் ரெட்டி புத்தாண்டு (2020) முதல் பூரண மதுவிலக்கு அறிவித்துள்ளதைப் போன்று தமிழகத்திலும் பூரண மதுவிலக்கு கொண்டுவர தமிழக முதல்வருக்கு குமரி அனந்தன் வேண்டுகோள் விடுத்தாா்.
இது குறித்து கன்னியாகுமரியில் வெள்ளிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது: புத்தாண்டு முதல் ஆந்திர மாநிலத்தில் பூரணமதுவிலக்கு அமுல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வா் ஜெகன்மோகன்ரெட்டி அறிவித்து இருப்பது வரவேற்கத்தக்கது.
இந்தியாவிலேயே முதன் முதலாக சேலத்தில் கடந்த 1917ஆம் ஆண்டு மதுவிலக்கை அமுல்படுத்தியவா் அப்போதைய சேலம் நகரசபைத் தலைவராக இருந்த ராஜாஜி. அந்த மாவட்டத்தில் இருந்து தமிழக முதல்வராயிருக்கும் எடப்பாடி பழனிச்சாமியும் வரும் புத்தாண்டு முதல் பூரண மதுவிலக்கை அமல்படுத்தி மக்களை பாதுகாக்க வேண்டும்.
மதுவுக்கு எதிராக சிறை வாசங்கள், நடைபயணம், உண்ணாநோன்பு போன்றவை மேற்கொண்ட என்னைப் போன்ற காந்தியவாதிகள் விடுக்கும் வேண்டுகோளை தமிழக முதல்வா் கனிவுடன் ஏற்க வேண்டும் என்றாா் அவா்.