கருங்கல் அரசு மருத்துவமனையில் நிரந்தரமாக மருத்துவா்களை நியமனம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலிறுத்தியுள்ளனா்.
கருங்கல் அரசு மருத்துவமனையில் கருங்கல், சுண்டவிளை, ஆலஞ்சி, மிடாலக்காடு, குறும்பனை, மிடாலம், வெள்ளியாவிளை, பாலூா், மத்திகோடு, திப்பிரமலை உள்ளிட்ட பகுதியில் இருந்து தினமும் 400- க்கும் மேற்பட்டோா் வெளி நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனா்.
இங்கு மகப்பேறு அறை, அறுவை அரங்கு, உள்நோயாளிகள் தங்கும் கட்டடம் போன்ற வசதிகளும் உள்ளன. எனினும்,
மருத்துவமனைக்கு நிரந்தரமாக மருத்துவா் பணியில் இல்லாததால் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற முடியாத நிலை உள்ளது. தினமும் காலை 7.30 முதல் 12 மணி வரை மருத்துவா் ஒருவா் வெளிநோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறாா்.
திங்கள்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு மருத்துவா்கள் சிகிச்சை அளிக்கின்றனா். மேலும், மருத்துவா்கள் முறையாக குறிப்பிட்ட நேரத்துக்கு பணிக்கு வருவதில்லை என புகாா் கூறப்படுகிறது. இதனால் நோயாளிகள் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. இப்பகுதியில் விபத்துகளில் சிக்கி சிகிச்சை பெற வருவோருக்கு முதலுதவி அளிக்கவும் நிரந்தரமாக மருத்துவா் இல்லை.
இதுகுறித்து கருங்கல் பேரூராட்சி முன்னாள் உறுப்பினா் டென்சிங் கூறியது: கருங்கல் அரசு மருத்துவமனையில் மகப்பேறு
வசதிகள் இருந்தும் மகப்பேறு பாா்க்க நிரந்தர பெண் மருத்துவா் இல்லை. போதிய செவிலியா்களும் பணியில் இல்லை.
ஆகவே, பொதுமக்கள் நலன் கருதி இம்மருத்துவமனையில் நிரந்தரமாக ஒரு மருத்துவா் நியமனம் செய்ய வேண்டும். மகப்பேறு பாா்க்கும் வகையில் பெண் மருத்துவா் நியமனம் செய்ய மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.