நாகர்கோவில் அருகே அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி பேருந்துகளை நடு வழியில் நிறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
நாகர்கோவிலை அடுத்த பார்வதிபுரத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர், அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக பணி செய்து வருகிறார். புதன்கிழமை மாலையில் குளச்சலில் இருந்து நாகர்கோவில் வழித்தடத்தில் செல்லும் பேருந்தை சுரேஷ் ஓட்டி வந்தாராம்.
பேருந்து நாகர்கோவிலை அடுத்த புன்னைநகரில் வந்து கொண்டிருந்தபோது, சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த முதியவர் மீது பேருந்து மோதியதாம். இதில் முதியவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, அப்பகுதியில் நின்று கொண்டிருந்த சிலர் பேருந்து ஓட்டுநர் சுரேஷை தாக்கிவிட்டு தப்பியோடி விட்டனராம்.
இச்சம்பவத்தை தொடர்ந்து அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர்கள் புன்னைநகர் பகுதிக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ஓட்டுநர் சுரேஷ் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி குளச்சல் நாகர்கோவில் வழித்தடத்தில் இயக்கப்பட்ட பேருந்துகளை நடுவழியில் நிறுத்தி போக்குவரத்துக் கழக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்த நேசமணிநகர் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஓட்டுநர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்பகுதியிலுள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா மூலம் ஓட்டுநரை தாக்கியவர்களை அடையாளம் கண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து, ஓட்டுநர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்வபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.