6 வட்டங்களில் நாளை ரேஷன் குறைதீர் முகாம்
By DIN | Published On : 13th September 2019 06:28 AM | Last Updated : 13th September 2019 06:28 AM | அ+அ அ- |

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களிலும் பொதுவிநியோக திட்ட சிறப்பு மக்கள் குறைதீர் முகாம் சனிக்கிழமை (செப்.14) நடைபெற உள்ளது.
இது குறித்து, மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பொது விநியோகத்திட்ட குறைபாடுகளை களையும் பொருட்டு, சிறப்பு மக்கள் குறைதீர் முகாம்கள் சனிக்கிழமை (செப்.14) நடைபெறுகின்றன.
அகஸ்தீசுவரம் வட்டத்தில் மயிலாடி பகுதிக்கு மயிலாடி பேரூராட்சி அலுவலகத்திலும், தோவாளை வட்டத்தில் சகாயநகர் பகுதிக்கு, ஊராட்சி அலுவலகத்திலும், கல்குளம் வட்டத்தில் மருதூர்குறிச்சி ஊராட்சி அலுவலகத்திலும், விளவங்கோடு வட்டத்தில் முழுக்கோடு ஊராட்சி அலுவலகத்திலும், திருவட்டாறு வட்டத்தில் பேச்சிப்பாறை ஊராட்சி அலுவலகத்திலும், கிள்ளியூர் வட்டத்தில் புதுக்கடை பேரூராட்சி அலுவலகத்திலும், வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை முகாம் நடைபெறும்.
மேற்கண்ட ஊராட்சி, பேரூராட்சி பகுதிக்குள்பட்ட குடும்ப அட்டைதாரர்களில் இதுவரை மின்னணு குடும்ப அட்டை பெற முடியாமல் ரேஷன் கடையில் ஒட்டப்பட்டுள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ள குடும்ப அட்டைதாரர்கள் தங்களது குடும்ப தலைவரின் புகைப்படம், செல்லிடப்பேசி எண், ஆதார் எண் பதிவுசெய்தல் போன்ற திருத்தங்கள் செய்து விரைவில் மின்னணு குடும்பஅட்டை பெறுவதற்கு மனு அளித்து தீர்வு காணலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.