நாகர்கோவிலில் காவலர் போல நடித்து மூதாட்டியிடம் 6.5 பவுன் தங்க நகையை பறித்துச் சென்றவர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
நாகர்கோவில் வடசேரி டிஸ்டிலரி சாலை மணியா நகரைச் சேர்ந்த அய்யம்பெருமாள் மனைவி கஸ்தூரி (75). இவர் சனிக்கிழமை மாலையில் கோயிலுக்குச் சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தாராம். அப்போது பைக்கில் வந்த இளைஞர்கள் 2 பேர் அவரை மறித்து, தாங்கள் காவலர்கள் எனவும், இப்பகுதியில் திருட்டு அதிகமாக நடைபெறுவதால், நீங்கள் அணிந்திருக்கும் தங்கச் சங்கிலியை கழற்றி பையில் வைத்துக்கொள்ளுங்கள் என கூறியுள்ளனர்.
இதையடுத்து கஸ்தூரி தான் அணிந்திருந்த 6.5 பவுன் தங்கச் சங்கிலியை கழற்றிய போது, அதை பேப்பரில் வைத்து மடித்து தருவதாக கூறி நகையை வாங்கிய அந்த இளைஞர்கள், அதை ஒரு காகிதத்தில் மடித்து திருப்பி அளித்து விட்டு பைக்கில் சென்று விட்டனராம்.
பின்னர் கஸ்தூரி அந்த பொட்டலத்தை பிரித்து பார்த்தபோது அதில் சிறு, சிறு கற்கள் இருந்ததாம்.
இதுகுறித்து அவர் வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.