கொல்லங்கோடு, புதுக்கடை, நித்திரவிளை பகுதிகளில் விதிமீறி இயங்கிய 18 கேரள பதிவெண் கொண்ட ஆட்டோக்கள், வேன் உள்ளிட்ட வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலர் தலைமையிலான அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
குளச்சல் சரக ஏஎஸ்பி கார்த்திக் உத்தரவின் பேரில், குளச்சல், கருங்கல், கொல்லங்கோடு, நித்திரவிளை, புதுக்கடை காவல் நிலைய ஆய்வாளர்கள் ஒருங்கிணைந்து, மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலர் க. பழனிச்சாமி தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சத்தியகுமார், செந்தில்குமார், சக்திவேல், பத்மபிரியா உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் திங்கள்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை கொல்லங்கோடு, நித்திரவிளை, புதுக்கடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இதில் உரிய ஆவணங்கள் இன்றியும், பல்வேறு குறைபாடுகளுடன் வந்த 55 கேரள பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது.
மேலும் விதிமுறைகளுக்கு புறம்பாக தமிழக சாலைவரி செலுத்தாமலும், அனுமதிச்சீட்டு பெறாமல் இயக்கப்பட்ட 10 ஆட்டோக்கள், 4 வேன்கள், 4 இலகுரக சரக்கு வாகனங்கள் உள்ளிட்ட 18 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு கொல்லங்கோடு, புதுக்கடை காவல் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இச் சோதனையில் ரூ. 1 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் ஒருங்கிணைந்த வாகன கூட்டுத் தணிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும், விதிமுறைகளுக்கு புறம்பாக இயக்கப்படும் கேரள பதிவெண் கொண்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் வட்டார போக்குவரத்து அலுவலர் க. பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.