மார்த்தாண்டம் அருகே சிற்றுந்து மீது லாரி மோதல்: 5 பேர் காயம்
மார்த்தாண்டம் அருகே சிற்றுந்து மீது லாரி மோதியதில் 5 பேர் காயமடைந்தனர்.
சூரியகோடு அப்பட்டுவிளை பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் சஜித் (30).
ஓட்டுநரான இவர், வெள்ளிக்கிழமை மார்த்தாண்டத்திலிருந்து வெட்டுவெந்நி நோக்கி சிற்றுந்தை ஓட்டிச் சென்றார். வெட்டுவெந்நி அருகே பெத்தேல்புரம் பகுதியைச் சேர்ந்த காட்வின் ஜெனில் ஓட்டிவந்த லாரி, இந்த சிற்றுந்தின் பின்புறம் மோதியதாம்.
இதில், சிற்றுந்து பயணிகளான மாராயபுரம் பகுதியைச் சேர்ந்த பரமேஸ்வரி (46), காப்புக்காடு நுள்ளிக்காட்டுவிளையைச் சேர்ந்த ஏசுதாஸ் மகள் ஜான்சி (20), முளங்குழி பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகள் ஸ்ரீகலாதேவி (25), தனலட்சுமி (50), சுசீலா (44) ஆகியோர் காயமடைந்தனர்.
அவர்கள் மார்த்தாண்டம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இருவர் காயம்: குலசேகரம் அருகே பொன்மனை கிழக்கும்பாகம் பகுதியைச் சேர்ந்தவர் ரவீந்திரன்நாயர் (72).
இவர், 2 நாள்களுக்கு முன் மார்த்தாண்டம் காந்தி மைதானம் பகுதியில் சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தாராம்.
அப்போது வந்த சிற்றுந்து ரவீந்திரன்நாயர் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவரை மீட்டு மார்த்தாண்டம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
மற்றொரு விபத்து: மார்த்தாண்டம் அருகே பள்ளியாடி வடலிக்கூட்டவிளை பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன் மகன் வினு (28). இவர், மார்த்தாண்டம் அருகே சாங்கை பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது எதிரில் நட்டாலம் பகுதியைச் சேர்ந்த டென்னிஸ் மகன் அபீஸ் (21) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் வினு மீது மோதி விபத்துக்குள்ளானது.
பலத்த காயமடைந்த வினுவை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த விபத்துகள் குறித்து மார்த்தாண்டம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.