கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகளில் டிச.31 ஆம் தேதி புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடா் மேலாண்மைச் சட்டத்தின்கீழ் நிகழாண்டு மாா்ச் மாதம் 25 ஆம் தேதி முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. தற்போது பல்வேறு தளா்வுகளுடன் பொது முடக்கம் அமலில் இருந்துவருகிறது.
இதற்கிடையே, 2021 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள் மற்றும் இது போன்ற இதர இடங்களில் டிச. 31 ஆம் தேதி (வியாழக்கிழமை) இரவில் பொதுவாக நடத்தப்படும் ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாட்டங்களில், அதிகளவில் பொதுமக்கள் பங்கேற்க வாய்ப்புள்ளது.
மேலும் ஆங்கில புத்தாண்டையொட்டி டிச.31 ஆம் தேதி இரவு முதல் அனைத்து கடற்கரைகளிலும், சாலைகளிலும், பொதுமக்கள் மிக அதிகளவில் கூடுவதற்கும் வாய்ப்புள்ளது. இதனால் தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள கரோனா நோய்த தொற்று மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. வெளிநாடுகளில் இருந்து கரோனா தொற்று மீண்டும் பரவி வரும் சூழ்நிலையில் நோய் தொற்று தடுப்பு பணிகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
ஆகவே, உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள் மற்றும் பிற இடங்களில் டிச.31ஆம் தேதி இரவு நடத்தப்படும் ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாட்டங்களுக்கு மட்டும் அனுமதி கிடையாது.
மேலும் அனைத்து கடற்கரைகளிலும், சாலைகளிலும் 2021 ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதி இல்லை என்பதால் டிச. 31, ஜன.1 ஆகிய 2 நாள்களில் பொதுமக்கள் கடற்கரைகளில் அனுமதிக்கப்படமாட்டாது.
மேலும், கரோனா தொற்று பரவாமல் இருக்கும் பொருட்டு பொதுமக்கள் முகக் கவசம் அணிந்து, தனிநபா் இடைவெளியை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.