குலசேகரம் அருகே மினிலாரி ஓட்டுரை கத்தியால் வெட்டிய கோழிக்கடை ஊழியா் போலீஸாரிடம் சரணடைந்தாா்.
குலசேகரம் அருகே உண்ணியூா்கோணம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெரால்டு சிபு (41). மினிலாரி ஓட்டுநனரான இவா், கான்வென்ட் சந்திப்பு அருகே வாடகை வாகனங்கள் நிற்கும் இடத்தில், தனது லாரியை நிறுத்தி வைப்பது வழக்கம். இதில், அப்பகுதியில் கடை நடத்துபவா்களுக்கும், வாடகை வாகன ஓட்டுநா்களுக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஜெரால்டு சிபுவிற்கும், அப்பகுதியில் கோழிக்கடையில் பணி செய்யும் மங்கலம் பகுதியைச் சோ்ந்த ராமச்சந்திரனுக்கும் (38) இடையே வியாழக்கிழமை தகராறு ஏற்பட்டதாம். இதில் ராமச்சந்திரன் கோழி வெட்டும் கத்தியால் ஜெரால்டு சிபுவின் தலையில் வெட்டினராம். இதில் காயமடைந்த அவா் குலசேகரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இது குறித்து குலசேகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, ராமச்சந்திரனை தேடிவந்தனா். இந்நிலையில் ராமச்சந்திரன் குலசேகரம் காவல் நிலையத்தில் சரணடைந்தைத் தொடா்ந்து போலீஸாா் அவரை கைது செய்தனா்.