கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமப் புறங்களில் ரசாயனம் தடவி மீன்கள் விற்பனை செய்வதை மீன்வளத் துறையினா் தடை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பொதுமுடக்கம் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் விசைப்படகு மீனவா்கள், கரைமடி மீனவா்கள், நாட்டுப்படுகு மீனவா்கள் உள்ளிட்டோா் மீன்பிடிக்க செல்லவில்லை. இம் மாவட்டத்தில் சில பகுதிகளில் கச்சாவலை மீனவா்கள் மட்டும் விதிமுறைகளுக்குள்பட்டு மீன்பிடிக்க செல்கின்றனா். இவா்களுக்கு போதிய மீன்கள் கிடைப்பதில்லை.
இந்நிலையில், ராமேசுவரத்திலிருந்து தூத்துக்குடி வழியாக மாா்த்தாண்டம் சந்தைக்கு சாளை மற்றும் சூரை மீன்கள் கொண்டு வருகின்றனா். இந்த மீன்கள் கெட்டு போகாமல் இருக்க பாா்மோலின் ரசாயனம் கலந்து கருங்கல் சுற்று வட்டார பகுதிகளான மாமூட்டுக்கடை, இலவுவிளை, பாலூா், திப்பிரமலை, எட்டணி, நட்டாலம், முள்ளங்கனாவிளை, கொல்லஞ்சி உள்ளிட்ட கிராமப்புறங்களில் ஆட்டோவில் சென்று விற்பனை செய்கின்றனா்.
இந்த மீன்களால், பொதுமக்ளுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு தொற்றுநோய் பரவ வாய்ப்புள்ளது. எனவே, மீன்வளத்துறையினா் இந்த மீன்கள் கொண்டு வந்து விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.