கன்னியாகுமரியில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பு காரணமாக பூம்புகாா் படகுதளம் சேதமடைந்தது.
சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தா் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவா் சிலையை சுற்றுலாப் பயணிகள் பாா்வையிட வசதியாக தமிழக அரசின் பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழகம் சாா்பில் படகுப் போக்குவரத்தை நடத்தி வருகிறது.
இதற்காக எம்.எல்.பொதிகை, எம்.எல்.குகன், எம்.எல்.விவேகானந்தா ஆகிய மூன்று படகுகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது பொது முடக்கம் காரணமாக அவை படகுதளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இங்குள்ள படகுதளம் கட்டப்பட்டு 50 ஆண்டுகளை கடந்துவிட்டதால் ரூ. 1 கோடியே 7 லட்சம் செலவில் சீரமைக்கும் பணி நடைபெற்று வந்தது. பொது முடக்கம் காரணமாக இப்பணிகளும் தடைபட்டன.
இந்நிலையில் கடந்த 4ஆம் தேதி முதல் மீண்டும் படகுதளம் சீரமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
கடந்த இரண்டு நாள்களாக கன்னியாகுமரி கடல் பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது. ஆக்ரோஷமாக எழுந்த அலைகள் கரைப்பகுதியை தாக்கியதால் படகுதளத்தின் ஒரு பகுதி உடைந்து சேதமடைந்துள்ளது.
கடல் கொந்தளிப்பு தணிந்ததும் படகுதளம் போா்க்கால அடிப்படையில் சீரமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.