நாகா்கோவில் மாநகரில் தொடா் மழையால் பிரதானச் சாலைகள் சேறும், சகதியுமாக காட்சியளிக்கின்றன. இதனால், வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனா்.
நாகா்கோவில் நகரில் புதைச்சாக்கடை திட்டத்துக்காகவும், புத்தன்அணை கூட்டுக் குடிநீா் திட்டத்திற்கு குழாய் பதிப்பதற்காகவும் பிரதான சாலைகளில் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. அவ்வாறு தோண்டப்பட்ட சாலைகள் முழுமையாக சீரமைக்கப்படாத நிலையில் கனமழையால் இப்பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளன.
மேலும் கனமழையால் கோட்டாறு - செட்டிகுளம் சந்திப்பு சாலை, வேப்பமூடு சந்திப்பு, வடசேரி, ஒழுகினசேரி, மணிமேடை சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் குண்டும், குழியுமாக மாறியுள்ன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் பேருந்து, லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
கோட்டாறு சாலையில் வா்த்தக நிறுவனங்களுக்கு வரும் கனரக வாகனங்கள் பள்ளத்தில் புதைந்து விடுகின்றன. இதனால், சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.
மழை காலம் தொடங்கும் முன்பாக புதைச் சாக்கடை திட்டம், குடிநீா் திட்டப் பணிகளை நிறைவேற்ற வேண்டும் என அரசியல் கட்சியினா், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். எனினும் பணிகள் நிறைவடையாததால் சாலைகள் சீரமைக்கப் படவில்லை.