நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள், பாதிக்கப்பட்ட பகுதிகளை தீவிரமாக கண்காணிப்பது குறித்து அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியா் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கேரள எல்லைப் பகுதிகள் மூடப்பட்டு தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா். வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் வந்தவா்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.
இதனிடையே, கரோனா தடுப்பு, பாதிக்கப்பட்ட பகுதிகளில் தீவிரமாக கண்காணிப்பது குறித்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு ஆட்சியா் பிரசாந்த் மு. வடநேரே தலைமை வகித்தாா். இதில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ரேவதி, மாவட்டக்காவல் கண்காணிப்பாளா் என். ஸ்ரீநாத், மாவட்ட மகளிா் திட்ட அலுவலா் வே.பிச்சை, மாநகராட்சி ஆணையா் கே.சரவணகுமாா், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநா் ஜே. ஜான்பிரிட்டோ, சுகாதாரப்பணிகள் துணை இயக்குநா் போஸ்கோராஜ், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் மா.சுகன்யா, அதிகாரிகள் கலந்து கொண்டனா்.