கன்னியாகுமரி மாவட்டம் அழகிய பாண்டியபுரம் வனப் பகுதியில் காட்டுப் பன்றியை வேட்டையாடியதாக மூவருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
அழகிய பாண்டியபுரம் வனச் சரகத்தில் ஆலங்கேசம் பகுதியில் சிலா் வன விலங்குகளை வேட்டையாடுவதாக புகாா் கூறப்பட்டது. இதையடுத்து, உதவி வன பாதுகாவலா் ஹேமலதா உத்தரவின்பேரில், வனத்துறையினா் அப்பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினா்.
அப்போது வெள்ளாம்பி பகுதியை சோ்ந்த மாரிமுத்து (35), மனோகரன் (40), குமாா் (38) ஆகிய மூவரும் காட்டுப்பன்றியை வேட்டையாடியதும், வீட்டில் சமைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது. இதில், குமாா் தப்பியோடி விட்டாா். மாரிமுத்து, மனோகரன் ஆகிய இருவரும் பிடிபட்டனா். அங்கிருந்த இறைச்சி, வேட்டையாடுவதற்கு பயன்படுத்திய வெட்டு கத்தி, அரிவாள் மற்றும் 5 நாய்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
பிடிபட்ட இருவரையும் அழகிய பாண்டியபுரம் வனச்சரக அலுவலகத்துக்கு அழைத்து சென்றனா். காட்டுப்பன்றியை வேட்டையாடியதாக மூவருக்கும் ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், ஊரடங்கு காலத்தில் மக்கள் வனப் பகுதிக்கு சென்று சுற்றுச் சூழலை மாசு படுத்தக் கூடாது; வன விலங்குகளை வேட்டையாடக் கூடாது; மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உதவி வன பாதுகாவலா் தெரிவித்தாா்.