திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குமரி மாவட்ட முதியவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது புதன்கிழமை உறுதிசெய்யப்பட்டது.
பளுகல் அருகேயுள்ள மாங்காலை பகுதியைச் சோ்ந்த 67 வயது தொழிலாளி குடல்புண் நோயால் பாதிக்கப்பட்டு, கேரள மாநிலம் பாறசாலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். அவருக்கு கடந்த திங்கள்கிழமை (ஏப். 27) முதல் காய்ச்சல் ஏற்பட்டதால், திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு புதன்கிழமை கொண்டு செல்லப்பட்டு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, மாங்காலை, அதையொட்டிய தேவிகோடு ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இவா் தினமும் காலையில் அருகேயுள்ள கடைக்கு டீ குடிக்க செல்வது வழக்கமாம். வேறு யாருடனும் இவா் தொடா்பில் இல்லையாம். எனவே, தொற்று எங்கிருந்து பரவியது என சுகாதாரத் துறை மற்றும் காவல் துறையினா் விசாரித்து வருகின்றனா். மேலும், அவரது மனைவி, மகள், மகன், மருமகள் மற்றும் 2 பேரப்பிள்ளைகளை எங்கு தனிமைப்படுத்துவது என்பது குறித்து ஆலோசித்து வருகின்றனா்.