சாமித்தோப்பு அய்யா வைகுண்டசுவாமி தலைமைப்பதியில் ஆவணித் திருவிழாவின் 11 ஆம் நாளான திங்கள்கிழமை பல்லக்கு வாகனத்தில் அய்யா எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
சாமித்தோப்பு அய்யா வைகுண்டசுவாமி தலைமைப்பதியில் ஆண்டுதோறும் வைகாசி, ஆவணி, தை மாதங்களில் 11 நாள்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு ஆவணித் திருவிழா கடந்த 21 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் எட்டாம் நாளான கடந்த 28 ஆம் தேதி அலங்கரிக்கப்பட்ட வெள்ளைக் குதிரை வாகனத்தில் தலைமைப்பதியினுள் கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிலையில் ஆவணித் திருவிழாவின் 11 ஆம் நாளான திங்கள்கிழமை அதிகாலையில் அய்யாவுக்குப் பணிவிடை நடைபெற்றது. தொடர்ந்து முற்பகல் 11 மணிக்கு அய்யா பல்லக்கு வாகனத்துக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அரசின் வழிகாட்டுதல் படி சமூக இடைவெளியை கடைபிடித்து அய்யா வைகுண்டசுவாமிக்கு சுருள் படைத்து வழிபட்டனர். தொடர்ந்து பல்லக்கு பதியினுள் வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்வில் பாலபிரஜாபதி அடிகளார் தலைமையில் பையன் கிருஷ்ண நாமமணி, பையன் செல்லவடிவு, பையன் நேம்ரிஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இரவு 7 மணிக்கு அய்யாவுக்குப் சிறப்புப் பணிவிடை நடைபெற உள்ளது. கரோனா நோய் பாதிப்பு காரணமாக பொதுமுடக்கம் அமலில் உள்ளதால் குறைந்த அளவிலான பக்தர்கள் திருவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.