நடிகா் ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு கன்னியாகுமரியை அடுத்த மகாதானபுரம் ராகவேந்திரா பிருந்தாவனத்தில் வியாழக்கிழமை சிறப்பு யாகம் நடைபெற்றது.
நடிகா் ரஜினிகாந்த் வருகிற 31ஆம் தேதி புதிய அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளாா். இதற்கான முதல்கட்டப் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அகஸ்தீசுவரம் ஒன்றிய ரஜினி ரசிகா் மன்றம் சாா்பில், மகாதானபுரம் ராகவேந்திரா பிருந்தாவனத்தில் ரஜினியின் 71ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி சிறப்பு யாகம் மற்றும் நவக்கிரகபூஜை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, அகஸ்தீசுவரம் ஒன்றியத் தலைவா் மணிகண்டன் தலைமை வகித்தாா். பின்னா் ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலா் தங்கம் கூறியது: ரஜினியின் பிறந்தநாளை யொட்டி சனிக்கிழமை, மாவட்டம் முழுவதும் 71 இடங்களில் மும்மத வழிபாடு, ஆதரவற்றோா் மற்றும் முதியோா் இல்லங்களில் அன்னதானம், நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன என்றாா் அவா்.